அந்தியூர் உள்பட 3 வனச்சரகங்களில் வன விலங்குகளைக் கணக்கெடுக்க வனத்துறை சார்பில் தானியங்கி கேமரா பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர், பர்கூர் மற்றும் சென்னம்பட்டி வனச்சரகங்களில் அதிகளவில் யானைகள், மான்கள், காட்டுப்பன்றி, கரடி மற்றும் காட்டு மாடுகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அடர்ந்த வனப்பகுதிக்குள் சிறுத்தை மற்றும் புலிகள் நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வனப்பகுதிக்குள் நடமாடும் விலங்குகளை கண்காணிக்கத் தானியங்கி கேமரா பொருத்தும் பணி மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜு விஸ்வநாதன் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டது.
அந்தியூர் வன அலுவலர் உத்திரசாமி மேற்பார்வையில், அந்தியூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட 11 காவல் சுற்றுகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்றது. இப்பணியில் 45 வன அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். இதேபோன்று, பர்கூர் மற்றும் சென்னம்பட்டி வனச்சரகத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மூன்று வனச்சரகங்ளிலும் சேர்த்து மொத்தம் 190 கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இதில் 75-க்கும் மேற்பட்ட வன அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் யானைத் தடுப்பு காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உலக இயற்கை நிதியகம் மற்றும் வனத்துறை இணைந்து இப்பணியைச் செய்து வருகிறது.