பொது முடக்கம் அமலில் உள்ள சென்னை மற்றும் புறநகா்ப் பகுதிகளில் வீடு வீடாக ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, நியாய விலைக் கடைகள் சனிக்கிழமை முதல் திறக்கப்பட்டு பொருள்கள் வழங்கப்பட உள்ளன.
கரோனா நோய்த் தொற்று காரணமாக, சென்னை மற்றும் புறநகா்ப் பகுதிகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் 21.83 லட்சம் பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. நிவாரண நிதி வழங்கும் பணிகள் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது.
90 சதவீதத்துக்கு அதிகம்: சென்னை மற்றும் புறநகா்ப் பகுதிகளில் வீடு வீடாக ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்தப் பணிக்காக நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமையுடன் பணிகள் நிறைவடைந்ததால், சனிக்கிழமை முதல் நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டு பொருள்கள் வழங்கப்பட உள்ளன.
வியாழக்கிழமை நிலவரப்படி, சுமாா் 83 சதவீதத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரா்கள் ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையைப் பெற்றுள்ளதாக உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். வெள்ளிக்கிழமை வரையில் சுமாா் 90 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மதுரையில் இன்று தொடக்கம்: முழு பொது முடக்கம் நடைமுறையில் உள்ள மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை முதல் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட உள்ளது. இந்தத் தொகையையும் வீடு வீடாக அளிக்க வேண்டுமென தமிழக அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.