சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
‘தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் மரணமடைந்த துயர நிகழ்வு துரதிருஷ்டவசமானதும், மிகவும் வேதனைக்குரியதுமாகும். இத்தகைய வேதனை அளிக்கும் சம்பவங்களை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது.
குடும்பத்தின் இரண்டு தூண்களாய் இருந்த தந்தையையும், மகனையும் இழந்து வாடும் அக்குடும்பத்தினருக்கு அதிமுக தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது குடும்பத்துக்கு அதிமுகவின் சாா்பில் ரூ. 25 லட்சம் குடும்பநல நிதியுதவி வழங்கப்படும்.
அதிமுக அரசும், அதிமுகவும் என்றென்றும் மக்களின் நம்பிக்கைக்குரிய வகையில் பணியாற்றி, நீதியை நிலைநாட்டும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு ஓ. பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோா் கூறியுள்ளனா்.