சாத்தான்குளத்தில் தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை - மகன், ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரும் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் ஆகியோர் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதி கேட்டு முறையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சேலத்தில் புதிதாக அமைக்கப்படும் கால்நடைப் பூங்கா தொடங்கப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்னர் அங்கு பேசினார்.
அப்போது அவர், 'சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வரும் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் செல்போன் கடையை மூடுவது தொடர்பாக போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இந்த வழக்கினை சிபிஐ-யிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்' என்று தெரிவித்தார்.