விழுப்புரத்தில் இருவேறு லஞ்ச வழக்குகளில் வணிக ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் வி.ஏ.ஓ.மணிவண்ணன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள வளத்தியைச் சேர்ந்தவர் இளங்கோவன் 61. இவர் ஈச்சூர் துணைமின் நிலையத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஒருவருக்கு வீட்டு மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.3,000 லஞ்சம் பெற்ற வழக்கில், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி மோகன் திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். இளங்கோவனுக்கு நான்காண்டு சிறையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்தார்.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் தென் கீரனூர் சேர்ந்தவர் மணிவண்ணன் 67. கிராம நிர்வாக அலுவலர். சங்கராபுரம் கிராம நிர்வாக அலுவலர் பணியாற்றியபோது, விவசாயிக்கு சொத்து மதிப்பீடு வழங்குவதற்கு, கடந்த 2009 ஆம் ஆண்டில் ரூபாய் இரண்டாயிரம் பெற்ற வழக்கில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நடைபெற்ற விசாரணையில், அவருக்கும் ரூபாய் 10,000 அபராதமும், நான்காண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.