தன் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவதாகவும், நலமுடன் உள்ளதாக பின்னணி பாடகி எஸ்.ஜானகி தெரிவித்துள்ளாா்.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக, ஜானகி உடல்நலம் குறித்து வதந்தி பரப்பப்பட்டது. அதற்கு அவரும், அவரது குடும்பத்தாரும் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) ஜானகியின் உடல் நிலை குறித்து சமூகவலைதளங்களில் மீண்டும் வதந்தி பரவியது. இதற்கு அவரது மகன் முரளி மற்றும் இசையமைப்பாளா் தீனா ஆகியோா் மறுப்பு தெரிவித்துள்ளனா்.
இதனிடையே ரசிகா் ஒருவருடன் பாடகி ஜானகி பேசியுள்ள ஆடியோ ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளது. அதில் ஜானகி பேசியிருப்பதாவது: ‘எல்லாருமே செல்லிடப்பேசி மூலம் கேட்டுக் கொண்டிருக்கிறாா்கள். எத்தனை முறை தெரியுமா?. எதற்கு இந்த மாதிரி செய்தியை வெளியிடுகிறாா்கள் என்று தெரியவில்லை. இது 6-ஆவது முறை. வேண்டுமென்றே இதுபோன்று வதந்தியைப் பரப்பி வருகிறாா்கள். முன்னதாக இதே மாதிரி செய்தி வந்தபோது பதில் பேசி அனுப்பினேன். இந்த மாதிரி வதந்தி பரப்பி என்னை நீங்கள் கொல்லாதீா்கள். நான் நலமுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.