சென்னை: சாத்தான்குளம் படுகொலைகள் தொடர்பாக கைது செய்ய தைரியமற்றவருக்கு முதல்வர் பதவி எதற்கு? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திங்களன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தொடர் பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது:
இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதி செய்கின்றன. கொலையாளிகளை IPC 302-ன்கீழ் கைது செய்ய வேண்டும் என முதல்வருக்கு நான் நினைவூட்ட வேண்டுமா?
இரு அப்பாவிகளின் உயிர்பறித்த குற்றவாளிகளைப் பாதுக்காக்க இன்னும் என்னென்ன செய்ய போகிறீர்கள்
பதவியை தவறாக பயன்படுத்துபவர்களிடம் இருந்து மக்களை காக்க வேண்டிய முதலமைச்சரே செயலற்று இருப்பது ஏன்? முதல்வரின் பலவீனம் அதிர்ச்சியளிக்கிறது.
கொலைகளை விசாரிக்கும் நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் விசாரணையை திருச்செந்தூருக்கு மாற்றியிருக்கிறார் நீதிபதி!
என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? கைது செய்ய தைரியமற்றவருக்கு முதல்வர் பதவி எதற்கு?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.