பிபிஇ கிட் ஏற்றுமதிக்கான தடையை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் திங்கள்கிழமை நீக்கியுள்ளது.
இதுகுறித்து ஏஇபிசி தலைவர் ஆ.சக்திவேல் (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம்) திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா நோய்த்தொற்றால் உலக அளவில் பிபிஇ கிட், என் 95 முகக் கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, இந்தியாவிலும் பிபிஇ கிட் எனப்படும் முழு பாதுகாப்பு கவச உடைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. எனினும் உள்நாட்டுத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பிபிஇ கிட் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.
இந்தநிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிபிஇ கிட் தொடர்பான விசாரணைகள் அதிக அளவில் வரத்தொடங்கியதால் ஏற்றுமதிக்கான தடையை நீக்கும்படி மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மாதந்தோறும் 50 லட்சம் எண்ணிக்கையில் பிபிஇ கிட்டுகளை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது. பிபிஇ கிட் உற்பத்தியானது உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ள நிலையில் தற்போது ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலமாக பிபிஇ கிட் ஏற்றுமதியில் வங்கதேசம், இந்தோனேஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் போட்டியிட முடியும். மேலும், நாட்டின் ஆயத்த ஆடைத் துறையில் மறுமலர்ச்சிக்கும் உதவிக்கரமாக இருக்கும். அதே வேளையில், என் 95 முகக் கவசம் ஏற்றுமதிக்கான தடையை நீக்கும்படி மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.