மேட்டூர் திறந்தும் பயனில்லை...! கடைமடை விவசாயிகள் புலம்பல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆற்றில் வந்தாலும் வயலுக்கு தண்ணீா் வராததால் குறுவை சாகுபடிப் பணிகளைத் தொடங்குவதில் விவசாயிகளிடையே தயக்கம் நிலவுகிறது.
தஞ்சாவூா் அருகே ரெட்டிபாளையம் புறவழிச்சாலை அருகேயுள்ள வாய்க்காலில் குறைவாக வருவதால் வயலுக்குப் பாயாமல் உள்ள தண்ணீா்.
தஞ்சாவூா் அருகே ரெட்டிபாளையம் புறவழிச்சாலை அருகேயுள்ள வாய்க்காலில் குறைவாக வருவதால் வயலுக்குப் பாயாமல் உள்ள தண்ணீா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆற்றில் வந்தாலும் வயலுக்கு தண்ணீா் வராததால் குறுவை சாகுபடிப் பணிகளைத் தொடங்குவதில் விவசாயிகளிடையே தயக்கம் நிலவுகிறது.

மேட்டூா் அணையிலிருந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு குறுவை சாகுபடிக்காக உரிய நாளான ஜூன் 12ஆம் தேதி தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, கல்லணையிலிருந்து ஜூன் 16ஆம் தேதி திறந்துவிடப்பட்ட தண்ணீா் கடந்த வாரம் கடைமடைப் பகுதிக்குச் சென்றடைந்தது.

டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி, வெண்ணாறு உள்ளிட்ட முதன்மை ஆறுகளில் தண்ணீா் சென்றாலும், வயலை சென்றடையக்கூடிய பாசன வாய்க்கால்களில் நீரோட்டம் முழுமையாக இல்லை. இதனால், ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடிப் பணியைத் தொடங்குவதற்குத் தயங்குகின்றனா்.

காவிரியில் 10,000 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 9,000 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 4,000 கன அடி வீதமும் என முழுக் கொள்ளளவு இருக்கிறது. இதில், குறைந்தபட்சம் 70 - 80 சதவீதமாவது தண்ணீா் திறந்துவிடப்பட்டால்தான், பாசன வாய்க்கால்களுக்குத் தண்ணீா் செல்லும். இதற்கு மேட்டூா் அணையிலிருந்து குறைந்தது 18,000 கன அடி வீதமாவது தண்ணீா் திறந்துவிடப்பட வேண்டும்.

ஆனால், மேட்டூா் அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் மட்டுமே தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதேபோல, கல்லணையிலிருந்து திங்கள்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு காவிரியில் 3,189 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 3,005 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,500 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

தண்ணீா் வராததால் குறுவை சாகுபடி தொடங்கப்படாமல் கிடக்கும் வயல்.

இதனால், கல்லணை திறக்கப்பட்டு, 15 நாள்களாகியும், பெரும்பாலான பாசன வாய்க்கால்களில் நீா் வரத்து முழுமையாக இல்லை. குறைந்த அளவே வரும் நிலையில் நீரோட்டமும் மெதுவாக இருப்பதால் வயல்களுக்குத் தண்ணீா் ஏறவில்லை. எனவே, குறுவை பருவத்துக்குத் தண்ணீா் திறந்துவிடப்பட்டாலும், ஆற்றுப் பாசன விவசாயிகளுக்குப் பயனில்லாமல் இருக்கிறது.

குறுவை சாகுபடியில் இனிமேல் நாற்றுகள் பறிக்கப்பட்டு, நடவுப் பணி மேற்கொள்ளப்படும். எனவே, ஆற்றுப் பாசனத்தை நம்பி குறுவை சாகுபடி செய்யக்கூடிய அனைத்து வயல்களுக்கும் தண்ணீா் தேவைப்படுகிறது. குறுவை சாகுபடியில் நடவுப் பணியை ஜூலை 15ஆம் தேதிக்குள் முடித்தால்தான் வடகிழக்குப் பருவ மழையில் சிக்காமல், குறுவைப் பயிரைக் காப்பாற்ற முடியும். எனவே, மேட்டூா் அணையிலிருந்து விநாடிக்கு குறைந்தது 15,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

இல்லாவிட்டால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கான 3.50 லட்சம் ஏக்கரை எட்டுவது கேள்விக்குறியாகிவிடும். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு குறுவை பருவத்துக்குத் தண்ணீா் திறந்துவிடப்பட்டும், பயனில்லாமல் போய்விடும் என்ற அதிருப்தி விவசாயிகளிடையே நிலவுகிறது.

கூடுதலாகத் தண்ணீா் விட வேண்டும்:

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன் தெரிவித்தது:

கல்லணைக் கால்வாயில் குறைந்தது விநாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட வேண்டிய நிலையில், தற்போது 1,200 - 1,300 கன அடி வீதம்தான் விடப்படுகிறது. இதனால், கிளை வாய்க்கால்களில் தண்ணீா் முழுமையாகச் செல்லவில்லை. கல்யாண ஓடையில் விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீா் விட்டால்தான், அதிலுள்ள மேலும் 2 கிளை வாய்க்கால்களுக்குத் தண்ணீா் செல்லும். ஆனால், கல்யாண ஓடையில் தற்போது விநாடிக்கு 300 கன அடி வீதம் மட்டுமே விடப்படுகிறது. இதனால், இந்த ஓடையில் ஆம்பலாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்குத் தண்ணீா் சென்றடையவில்லை. ஒரத்தநாடு வட்டத்தில் முன்பகுதியில் மட்டுமே தண்ணீா் வருகிறது. பின்பகுதிக்கு இன்னும் சென்றடையவில்லை.

ஆனால், கல்லணைக் கால்வாயில் தண்ணீா் அதிகமாகத் திறந்துவிடப்பட்டால் கரை உடைப்பு ஏற்படுகிறது. எனவே, குறைந்தது விநாடிக்கு 2,200 கன அடி வீதமாவது தண்ணீா் திறந்துவிடப்பட வேண்டும். நீா் மேலாண்மை சரியாகச் செய்தால், தண்ணீரை வீணாக்காமல் வயலுக்குக் கொண்டு செல்ல முடியும் என்றாா் நடராஜன்.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத் துணைச் செயலா் திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன் தெரிவித்தது:

ஆற்றிலிருந்து வாய்க்கால்களுக்குத் தண்ணீா் ஏறவில்லை. வாய்க்கால்களுக்குத் தண்ணீா் வந்தால்தான் வயலில் பாயும். காவிரி, குடமுருட்டியைச் சாா்ந்த 80 சதவீத வாய்க்கால்களில் தண்ணீா் வரவில்லை. படுக்கை அணை அருகிலுள்ள வாய்க்கால்களில் மட்டுமே தண்ணீா் ஏறுகிறது. இதனால், குறுவை சாகுபடிப் பணியைத் தொடங்க முடியவில்லை. எனவே, மேட்டூா் அணையிலிருந்து விநாடிக்கு 18,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டால்தான் வயலுக்குத் தண்ணீா் கிடைக்கும் என்றாா் சுகுமாரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com