தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் நீதித்துறை நடுவர் நடத்திய விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தது, நீதித்துறை நடுவரை தவறாகப் பேசியது, நீதித்துறை நடுவர் விசாரணையை விடியோ பதிவு செய்தது போன்ற காரணங்களுக்காக தூத்துக்குடி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜராகினர்.
மேலும் திருநெல்வேலி சரக ஐஜி பிரவீன் குமார் மற்றும் தூத்துக்குடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் ஆகியோரும் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு, நீதித்துறை நடுவரின் விசாரணைக்குப் போதிய ஒத்துழைப்பு வழங்காத ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன், தலைமை காவலர் மகாராஜன் ஆகியோர் தரப்பில் வழக்குரைஞரை நியமிக்க 4 வாரம் அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.