அம்பாசமுத்திரம், பாபநாசம் சாலையில் முன்னால் சென்ற மோட்டார் பைக் மீது பின்னால் வந்த டிராக்டர் மோதியதில் தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள முதலியார்பட்டியைச் சேர்ந்த சங்கர நாராயணன் மகன் ரவி. இவர் தனது மகள் சுபிக்ஷாவுடன் அம்பாசமுத்திரம் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அகஸ்தியர்பட்டி சாய்பாபா கோயில் அருகில் சென்றபோது சாலையின் குறுக்கே நாய்க்குட்டி வந்ததையடுத்து ரவி பைக்கை நிறுத்தியுள்ளார். அப்போது அவருக்குப் பின்னால் ஏர்மாள்புரத்திலிருந்து செங்கல் ஏற்றி வந்த டிராக்டர் பிரேக் பிடிக்காமல் ரவியின் பைக் மீது மோதியதாம்.
இதில் ரவி மற்றும் அவரது மகள் சுபிக்ஷா இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். டிராக்டர் ரவியின் பைக்கை இழுத்துக்கொண்டு சுமார் 50 மீட்டர் தூரம் சென்று நின்றது. டிராக்டர் ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டார். தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் விரைந்து வந்து ரவி மற்றும் சுபிக்ஷாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.