சென்னை: நிகழாண்டில் ஓய்வூதியதாரர்களும், குடும்ப ஓய்வூதியதாரர்களும் வாழ்வு சான்றிதழ் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் திங்கள்கிழமை பிறப்பித்தார்.
அதன் விவரம்: ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோர் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களுக்குள் தங்களது வாழ்வு சான்றினை அளிக்க வேண்டும். இந்தச் சான்றினை அளிக்காதவர்கள் அக்டோபரில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன்பாக நேரில் ஆஜராக வேண்டும்.
இதையும் செய்யத் தவறினால் நவம்பரில் இருந்து ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியன நிறுத்தப்படும். இந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று காரணமாக சிறப்பு நிகழ்வாகக் கருதி நிகழாண்டில் வாழ்வுச் சான்றினை அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையாளர் அரசைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அவரது கோரிக்கையை தமிழக அரசு, கவனமுடன் பரிசீலித்து ஏற்றுக் கொண்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று அதிகம் பாதிக்கக் கூடிய வயதினராக ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளதால் அவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவினை சிறப்பு நிகழ்வாகக் கருதி தமிழக அரசு எடுத்துள்ளது என்று தனது உத்தரவில் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.