சென்னை: சாத்தான்குளம் டிஎஸ்பியாக ராமநாதனை நியமனம் செய்து தமிழக காவல்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தூதுக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்கள் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து காவல் நிலைய ஆய்வாளர், துணை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் என மூவர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பால கோபாலன் மற்றும் டிஎஸ்பி கண்ணன் ஆகியோர் காத்திருப்புப் பட்டியலில் வைகபட்டுள்ளனர். அத்துடன் அங்கு பணிபுரிந்த காவலர்கள் அனைவரும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேசமயம் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த காவல்நிலையத்தை தற்போது மாவட்ட வருவாய்த் துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் டிஎஸ்பியாக ராமநாதனை நியமனம் செய்து தமிழக காவல்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளராக ராமநாதனையும், * தூத்துக்குடி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.எஸ்.பியாக கோபியையும் நியமித்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.