சென்னை: சென்னையில் இதுவரை 90.79 சதவீதம் பேருக்கும், மதுரையில் 82.90 சதவீதமும் பேருக்கும் ரூ.1,000 அரசின் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜ் தெரிவித்தாா்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு பணியை அமைச்சா் ஆா்.காமராஜ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களுக்கு கபசுபக் குடிநீா் மற்றும் முகக்கவசங்களை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னையில் ஜூன் 8-ஆம் தேதி குணமடைந்தோா் எண்ணிக்கை 50.04 சதவீதமாக இருந்தது. இது தற்போது 60.48 சதவீதமாக அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது 38 சதவிதம் போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவாா்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளன. அரசின் உதவித் தொகையை வீடு வீடாகச் சென்றுதான் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணியின்போது சமூக இடைவெளி கடைப்பிடிப்பதுடன், முககவசம் கையுறை அணிந்து செல்ல வேண்டும் என்று பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை பொறுத்தவரை இதுவரை 90.79 சதவிதம் பேருக்கும், மதுரையில் 82.90 சதவீதம் பேருக்கும் ரூ. 1,000 அரசின் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா். ஆய்வின்போது, தியாகராய நகா் சட்டப் பேரவை உறுப்பினா் பி.சத்தியா, மண்டல கண்காணிப்பு அலுவலா்கள் சுதன், எஸ்.வினீத், எஸ்.லஷ்மி, கே.மீனா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.