அய்யா வைகுண்டரின் 188ஆவது அவதார தினத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகர்கோவிலில் இருந்து சுவாமி தோப்புக்கு ஊர்வலம் மேற்கொண்டனர்.
நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்துக்கு சுவாமி தோப்பு தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்தார். இதில் முத்துக்குடை ஏந்தி நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். சிறுவர் சிறுமியர்களின் கோலாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அய்யா ஹரஹர சிவனே என்ற நாமத்தை உச்சரித்தபடி கையில் காவிக் கொடி ஏந்திய ஆயிரக்கணக்கான அய்யா வழி பக்தர்கள் நடைப் பயணமாக சுவாமித்தோப்புக்கு சென்றனர். இந்த நடைப்பயணத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து வந்தன. அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு குமரி நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பக்தர்கள் வசதிக்காக நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் முக்கிய பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.