எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை அதிமுகவினர் முறியடிக்க வேண்டும் என முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக இலக்கிய அணி சார்பில் சொல்வோம் வெல்வோம் என்ற பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து செய்யும் பொய் பிரசாரத்தை அதிமுகவினர் முறியடிக்க வேண்டும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவுப்படி இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவே ஆட்சி செய்யும். 2021ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று அம்மாவின் கனவை நினைவாக்குவோம். அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பேச்சாற்றல் என்பது ஒரு கட்சியின் இதயம் போன்றது. சிறந்த பேச்சாற்றல் மூலம்தான் கட்சி வலுவடையும். இவ்வாறு அவர் கூறினார்.