சென்னை: தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே செவ்வாய் மதியம் நடந்த நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் பிரதான பகுதிகளில் ஒன்றான தேனாம்பேட்டையில் புகழ்பெற்ற காமராஜர் அரங்கம் அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் செவ்வாய் மதியம் நாட்டு வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டது. அந்த வெடிகுண்டு வெடித்ததில் அருகிலிருந்த கார் ஷோரூமின் கண்ணாடி உடைந்து சேதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த காவல்துறை துணை ஆணையர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சந்தேகத்திற்குரிய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு அருகில்தான் தேனாப்பேட்டை காவல்நிலையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.