ஜப்பானில் இருந்து கோவை வந்த இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பரவியுள்ளது. இதற்கு தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் கரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. தடுப்பு நடவடிக்கையாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே இந்தியாவுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 26ம் தேதி ஜப்பானில் இருந்து மாணவர் ஒருவர் சிங்கப்பூர் வழியாக கோவை வந்தார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் காய்ச்சல் இருந்தது தெரிய வந்தது. பின்னர் கரோனா வைரஸ் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ள சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
அதேபோன்று டோக்கியோவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்த 40 வயது ஆண் ஒருவருக்கு கரோனா அறிகுறி இருந்ததால் அவருக்கும் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வைத்து மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இறுதியாக அவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இருவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில், 28 நாட்கள் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது. என்றும் காய்ச்சல், சளி என ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் மருத்துவமனைக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.