கோவை: கோவை கோனியம்மன் கோயில் மாசித் தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கோவை நகரின் காவல் தெய்வமாக விளங்கிவரும் கோனியம்மன் கோயிலில் மாசி தேர்த் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா பூச்சாட்டுதலுடன் பிப்ரவரி 18 }ஆம் தேதி தொடங்கியது. தேரோட்டத்துக்கான கொடியேற்றம் பிப்ரவரி 25 }ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக தேரில் எழுந்தருள்வதற்காக கோயிலில் இருந்து அம்மன் புறப்பாடு காலை 5 மணிக்கு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் கெüமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், பொதுமக்கள் இணைந்து வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர்.
கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் மாலை 5.40 மணிக்கு நிலையை அடைந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் மீது உப்பு வீசி வழிபட்டனர். தொடர்ந்து அம்மன் பரிவேட்டை நிகழ்ச்சி வியாழக்கிழமையும், தெப்பத் திருவிழா மார்ச் 6}ஆம் தேதியும், தீர்த்தவாரி, கொடியிறக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் மார்ச் 7 ஆம் தேதியும் நடைபெறுகின்றன. மார்ச் 9 }ஆம் தேதி வசந்த விழா நிகழ்ச்சியுடன் தேர்த் திருவிழா நிறைவடைகிறது.
தண்ணீர் பாட்டில் வழங்கிய முஸ்லிம்கள்: கோவை கோனியம்மன் கோயில் தேர்த் திருவிழாவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஒப்பணக்கார வீதியிலுள்ள கோயம்புத்தூர் அத்தர் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.