குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து திருப்பூர் செல்லாண்டியம்மன் துறை பகுதியில் இஸ்லாமியர்கள் 21 வது நாளாக தொடர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் திருப்பூரில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டம் பொதுமக்களுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் திருப்பூர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டதை அடுத்து இன்று இஸ்லாமியர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிகமாக இந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது.
இது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் 21 வது நாளாக தொடர்ந்து போராட்டம் அமைதியான வழியில் நடைபெற்று வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.