சென்னை: கரோனா அச்சம் காரணமாக மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோரை மிகக் கவனமாக கையாள போக்குவரத்து காவல்துறைக்கு அப்பிரிவின் ஐ.ஜி தேவாசீர்வாதம் அறிவுரை கூறியுள்ளார்.
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி ஏற்பட்ட விபத்திற்கான இழப்பீடு தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது . அப்போது நீதிமன்றம், மது போதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்களை கைது செய்ய வேண்டும்.அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.வாகன ஓட்டிகள் மதுபோதையில் செல்கிறார்களா என்பதை கண்டறிய தேவையான சுவாசப் பரிசோதனை செய்ய தேவையான கருவிகளை காவல்துறைக்கு வழங்க வேண்டும். மேலும் மது போதையில் இருப்பவர்கள் வாகனங்களை இயக்க முடியாதபடி, வாகனங்களில் பிரத்யேக கருவிகளை பொருத்த வாகன உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிடுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். அத்துடன் மதுபோதையில் வாகனம் ஓட்டி சென்றதாக மாதம் தோறும் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்படுகிறார்கள்? என்பது உள்ளிட்ட விவரங்களை தமிழக அரசு சமர்ப்பிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் கரோனா அச்சம் காரணமாக மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோரை மிகக் கவனமாக கையாள போக்குவரத்து காவல்துறைக்கு அப்பிரிவின் ஐ.ஜி தேவாசீர்வாதம் அறிவுரை கூறியுள்ளார்.
முழுமையாகத் தேவை ஏற்படாத பட்சத்தில் வாகன ஓட்டிகளை வாயால் ஊதுமாறு கேட்டு, பிரீத்திங் அனலைசர் கருவி மூலம் பரிசோதிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், போக்குவரத்து சந்திப்புகளில் பணியாற்றும் காவலர்கள் கட்டாயம் முகக் கவசங்களை அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது
இந்த அறிவுரைகள் எழுத்துப்பூர்வமாக அல்லாமல், வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.