வேலூர்: தங்களது மருத்துவமனையில் 81 வயது முதியவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பிறகான சிகிச்சை வழங்கப்படுவதாக வெளியான தகவல் குறித்து வேலூர் சிஎம்சி மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.
கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் 81 வயது முதியவர் ஒருவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. இதன்காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் தங்களது மருத்துவமனையில் 81 வயது முதியவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பிறகான சிகிச்சை வழங்கப்படுவதாக வெளியான தகவல் குறித்து வேலூர் சிஎம்சி மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக சிஎம்சி மருத்துவ கண்காணிப்பாளர் பரசாத்மேத்யூ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசின் சுகாதாரத்துறையின் உத்தரவின்படி சிஎம்சியில் கோவிட் - 19 வைரஸிற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை மற்றும் கோவிட் - 19 தாக்கிய நோயாளிகளை அனுமதிப்பதும் இல்லை.
இந்த நிலையில், சிஎம்சியில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு கரோனா வைரஸ் தாக்கியிருப்பதாக கட்செவி வதந்தி பரப்பப்படுகிறது. குறிப்பிடப்பட்ட அந்த நபருக்கு சாதாரண ஜலதோஷத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வகை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் உலகை அச்சுறுத்திவரும் கோவிட் 19 வகை நோயை ஏற்படுத்தும் வைரஸ் அல்ல. எனவே, உண்மையை அறியாமல் யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். இத்தகைய செயல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.