எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டது குறித்து நாளை அறிவிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அவர் கூறியதாவது:
"எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டது குறித்து நாளை அறிவிக்கப்படும். கரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் ஆலோசித்து தேவையான முன்னெச்சரிகை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக விரைவில் அறிக்கை வெளியிடப்படும். தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக இல்லை.
ரஜினி இன்னும் கட்சியை தொடங்கவில்லை. எனவே, அதுபற்றி கற்பனையான கருத்தைக் கூற இயலாது. கமலின் சக்தியை கடந்த தேர்தலில் பார்த்துவிட்டோம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், மக்களை சந்திக்கலாம். தேர்தலுக்குப் பிறகு அமமுக இருக்குமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
குடியுரிமைச் சட்டம் குறித்து சிறுபான்மையின மக்களின் அச்சத்தை போக்கும் விதமாக சட்டப்பேரவையில் நேற்று கூறப்பட்டுவிட்டது" என்றார்.
அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்றும், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களைக் கேட்போம் என்றும் பாஜக தமிழக தலைவர் முருகன் கூறியது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த முதல்வர், அவர் கட்சியை வளப்பதற்காகக் கூறியிருப்பார் என்றார்.