கரோனா வைரஸ் பரவலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநள்ளாறு நளன் தீர்த்தக் குளத்தில் நீராடத் தடை விதிக்கப்பட்டதையொட்டி, சனிக்கிழமை வந்த பக்தர்கள் குளத்தில் நீராட முடியாமல் திரும்பிச் சென்றனர்.
கரோனா வைரஸ் பரவலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவானைத் தரிசிக்க வரும் பக்தர்கள், இருமல், சளி போன்றவை இருந்தால் கோயிலுக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுபோல நளன் தீர்த்தக் குளத்தில் நீராடவும் புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி தடை விதிப்பு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டார்.
சனிக்கிழமை வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு வரும் நிலையில், 14ஆம் தேதி வந்த பக்தர்கள் பெரும்பான்மையினர் நளன் தீர்த்தக் குளத்திற்கு நீராடச் சென்றனர். கோயில் பகுதியிலும், குளம் சுற்றுவட்டாரத்திலும் போலீஸார் குளத்தில் நீராடத் தடை அமலில் உள்ளதை ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்திவருவதையொட்டி, பக்தர்கள் பிரார்த்தனையின் பேரில் அணிந்த ஆடைகளைக் குளக்கரையில் போட்டுவிட்டு, வேறு ஆடை உடுத்திக்கொண்டு, குளத்தில் உள்ள நீரைத் தீர்த்தமாகத் தலையில் தெளித்துக்கொண்டு கோயிலுக்குச் சென்றனர்.
இதனால் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடக்கூடிய நளன் தீர்த்தக்குளம், சுற்றுவட்டாரப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது. வழக்கமான நிலையில் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்துவருகின்றனர்.