பேர்ணாம்பட்டு வனப்பகுதியில் இறந்து கிடந்த 6 மாத சிறுத்தைக் குட்டியின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே வனப்பகுதியில் பாய்மலை எனும் தனியார் பட்டா நிலம் உள்ளது. அங்கு சுமார் 6 மாத சிறுத்தைக் குட்டி ஒன்று சனிக்கிழமை காலை மர்மமான முறையில் இறந்து கிடப்பதாகப் பொதுமக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
பேர்ணாம்பட்டு வனச்சரகர் சங்கரய்யா தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று சிறுத்தைக் குட்டியின் உடலைக் கைப்பற்றி வன அலுவலகத்துக்குக் கொண்டு வந்தனர். தொடர்ந்து, அந்த சிறுத்தைக் குட்டியின் உடலுக்கு வண்டலூர் மிருகக் காட்சி சாலையின் கால்நடை மருத்துவர் பிரதீப், பிரேதப் பரிசோதனை செய்தார்.
இதில், சிறுத்தைக் குட்டி தண்ணீர் குடிக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாக வனச்சரகர் சங்கரய்யா தெரிவித்தார். தொடர்ந்து, சிறுத்தைக் குட்டியின் உடல் உதவி வனக்கோட்ட அலுவலர் ஆர்.முரளிதரன் முன்னிலையில் தீயிட்டு எரிக்கப்பட்டது.