திருவள்ளூர் அருகே வாகனச் சோதனையில் நாட்டு வெடிகுண்டு, பட்டாக்கத்தியுடன் வந்த 2 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் தரப்பில் கூறியதாவது..
திருவள்ளூர் அருகே கிராமிய காவல் நிலைய போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனம் நிற்காமல் சென்றதால், பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்து வாகனத்தைச் சோதனையிட்டனர். அப்போது, அவர்களிடம் நாட்டு வெடிகுண்டுகள், பட்டாக்கத்தியும் இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
மேலும், போலீஸார் விசாரணையில் அவர்கள் ராமலிங்கம்(48) மற்றும் ரஞ்சித்(30) என்பது தெரியவந்தது. அதேபோல், பிரபல ரவுடி பாம் சரவணனை தீர்த்துக் கட்டுவதற்காக சிறையிலிருந்த நாகேந்திரன் என்ற சிறைக்கைதி அளித்த தகவலை அடுத்து கொலை செய்வதற்கு சென்றதும் விசாரணை மூலம் தெரியவந்தது.
மேலும், திருவள்ளூர் கிராமிய காவல் நிலைய போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்து, கொலை மிரட்டலும் விடுத்ததாகவும் கூறி 2 பேரையும் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.