கோவை கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களை வரும் மார்ச் 21ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் செவ்வாயன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது
கரோனா வைரஸ் உலகில் 146 நாடுகளுக்குப் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை, சுமார் 1.65 லட்சம் பேருக்கு இந்த நோய் தொற்றியுள்ளது, இவர்களில் சுமார் 6,500 பேர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களையும் வரும் மார்ச் 21ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வரும் சனிக்கிழமை வரை நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.