திருவள்ளூர்: வெளி மாநிலங்களுக்கு சென்று வந்த திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநருக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருந்ததால், செவ்வாய்க்கிழமை இரவு முதலுதவி சிகிச்சைக்கு பின் சென்னை அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.
திருவள்ளூர் அருகே ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் சரக்கு வாகனத்தில் கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களுக்கு சென்று வருவாராம். இந்த நிலையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் ஊத்துக்கோட்டைக்குத் திரும்பினாராம். அதைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து சளி இருமல் குறையாமல் இருந்த காரணத்தால் அங்கிருந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாலை 4 மணிக்கு வந்தாராம். ஆனால், மருத்துவர்கள் யாரும் கண்டு கொள்ளாத நிலையில் அங்கு பணியில் இருந்தவர்கள் முககவசம் அணிந்து கொண்டார்களாம். பின்னர் சரியாக இரவு 9 மணிக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில், உடனே சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்.