கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பவர்கள் மக்கள் நல்வாழ்வுத் துறையை அணுகி பரிசோதனை மூலமாக நிரூபித்தால் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை கரோனா வைரஸ் குறித்த சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உலகளவில் புகழ்பெற்ற பல்வேறு மருத்துவர்கள் கலந்துகொண்டு கரோனா வைரஸ் குறித்து விவாதித்தனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 'தமிழகத்தில் கரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் சிறப்பு சிகிச்சை வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறுவோர் மக்கள் நல்வாழ்வுத் துறையை அணுகி பரிசோதனை மூலமாக நிரூபித்தால் உரிய அங்கீகாரம் வழங்கப்படும்' என்று தெரிவித்தார்.