கரோனா அச்சம் காரணமாக திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பூங்காக்கள் அனைத்தும் புதன்கிழமை முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், மால்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, பொதுமக்கள் பயன்படுத்தும் பூங்காக்களும் மூடப்பட்டுள்ளன.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்டு திருவரங்கம், பொன்மலை, கோ. அபிஷேகபுரம், அரியமங்கலம் என 4 கோட்டங்கள் உள்ளன. இந்த 4 கோட்டங்களுக்கும் நடைபயிற்சி பூங்கா, சிறுவர் விளையாட்டு பூங்கா, அறிவியல் பூங்கா, பொழுதுபோக்கு பூங்கா, பசுமை பூங்கா, திறந்தவெளி உடற்பயிற்சி மையத்துடன் கூடிய பூங்கா என பல்வேறு நிலைகளில் 100-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்கள் அனைத்தும் புதன்கிழமை முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கரோனா வரைஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு உத்தரவின்படி மறு உத்தரவு வரும் வர பூங்காக்கள் மூடப்படுகின்றன. அனுமதியின்றி உள் நுழைய முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.