திருப்பரங்குன்றம் அருகே ஹார்வி பட்டியில் குடும்ப பிரச்னை காரணமாக மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹர்விபட்டி ரோஜா தெருவைச் சேர்ந்தவர் அசோக்(32). இவரது மனைவி சுதா(27). திருமணமாகி இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
அசோக் குமார் வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அசோக் குடித்துவிட்டு வந்தபோது கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில் அசோக் தன்னுடைய மனைவி சுதா கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டுத் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து சுதாவின் அப்பா ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் திருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுதா உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப பிரச்னை காரணமாக கணவன் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.