சிவகங்கை தெப்பக்குளத்தில் இறங்கி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் போராட்டம்
சிவகங்கை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் உள்ள தெப்பக்குளத்தில் இறங்கி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதுகுறித்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் புதன்கிழமை சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சிவகங்கை மாவட்டச் செயலர் சித்திக் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் தீன், மாவட்டத் துணைச் செயலர்கள் சாகுல், சம்சுதீன், சேக் தாவூத், மாவட்ட மாணவரணிச் செயலர் முகமது இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதைத் தொடர்ந்து, போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சில இளைஞர்கள் கையில் தேசியக் கொடியுடன் சிவகங்கை அரண்மனை முன்பு உள்ள தெப்பக்குளத்தில் திடீரென இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன் உள்ளிட்ட போலீஸôர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கரைக்கு திரும்பினர். அதன்பின்னர் கலைந்து சென்றனர்.