திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பூண்டி அருகே கிருஷ்ணா கால்வாயில் குளிக்கச் சென்ற இரு மாணவர்கள் புதன்கிழமை நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக புல்லரம்பாக்கம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே மேல்மணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் சரவணன்(15). திருவள்ளூர் ஜி.டி.நாயுடு சாலை பகுதியைச் சேர்ந்த கிருபாகரராஜ் மகன் குபேந்திரன் (15). இவர்கள் இருவரும் திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வரும் 27 - ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. அதனால், தனியார் பள்ளிக்கு வந்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கான நுழைவுச் சீட்டு பெறுவதற்காக வந்துள்ளனர்.
பின்னர் நுழைவுச் சீட்டை பெற்றுக் கொண்டு இருவரும் மகிழ்ச்சியாக குளித்து விளையாடுவதற்காக பூண்டி அருகே கிருஷ்ணா கால்வாய் பகுதிக்கு பிற்பகலில் சென்றார்களாம். அப்போது, நீண்ட நேரம் குளித்து கொண்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாரத விதமாக நீரில் மூழ்கி உள்ளனர். அப்போது, அங்கு ஏற்கெனவே குளித்துக் கொண்டிருந்த மாணவர்கள் பார்த்து அபாயக்குரல் எழுப்பியுள்ளனர். பின்னர் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து கால்வாய்க்குள் இறங்கி 2 பேரையும் மீட்டனர். அப்போது, மாணவர்கள் 2 பேரும் மூச்சு திணறி உயிரிழந்தது தெரியவந்தது.
உடனே இது தொடர்பாக புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸôர் மாணவர்களின் சடலங்களை மீட்டு திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.