திருவள்ளூர்: பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா கால்வாய் வழியாக இதுவரையில் விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக 630 கனஅடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளதாகவும், தற்போது புதன்கிழமை காலை நிலவரப்படி 1524 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ள நிலையில் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சி பொதுமக்களின் தாகம் தணிக்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக விளங்குவது திருவள்ளூர் அருகே பூண்டி ஏரியாகும். கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதியில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நிலையில், சராசரியாக 350 கன அடி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் நீர் வரத்து 150 கனஅடியாக குறைந்தது. இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி ஆகியோர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டியை நேரில் சந்தித்தனர். அப்போது, கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டப்படி கூடுதல் தண்ணீர் திறக்கவும் கோரிக்கை வைத்தனர்.
இதன் அடிப்படையில் கடந்த 4-ஆம் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமானது. மேலும், அன்றைய நாள் முதல் வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக நீர் வரத்து 630 கன அடியாக அதிகரித்துள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கவும் முடியும். இந்த நிலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி நீர் மட்டம் 29.02 அடியாக பதிவாகியிருந்தது.