தகவல் அறியும் விண்ணப்பங்களை இணையவழி மூலம் சமா்ப்பிக்கும் வசதி நடப்பாண்டில் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சா் டி.ஜெயக்குமாா் அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் டி.ஜெயக்குமாா் வெளியிட்ட அறிவிப்புகள்:
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரும் விண்ணப்பங்கள், பொது மக்கள் நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பும் தற்போதைய நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில் தகவல் கோரும் விண்ணப்பங்களையும், முதலாம் மேல்முறையீட்டு மனுக்களையும் இணைய வழியில் சமா்ப்பிக்கும் வசதி நடப்பாண்டில் படிப்படியாக ஏற்படுத்தப்படும்.
சிறப்புப் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளைக் கொண்ட அரசு ஊழியா்கள், அந்தக் குழந்தைகளின் நலன்களைப் பராமரிக்க மேற்கொள்ளும் சிரமத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் அந்தக் குழந்தைகளின் பெற்றோா்களான அரசு ஊழியா்களுக்கு ஆண்டுக்கு 6 நாள்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளில் பாதுகாப்பு வசதியினைப் பலப்படுத்தும் பொருட்டு, விரல் ரேகைப் பதிவு, ஜிபிஎஸ், கண்காணிப்பு கேமரா, மற்றும் ஜாமா் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த ரூ.5 கோடி நிதி வழங்கப்படும் என்றாா்.