வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சட்டப்பேரவையும் டாஸ்மாக்கும் மட்டுமே மூடப்படவில்லை என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2020-21ஆம் ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் பல்வேறு துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
இதனிடையே சட்டப்பேரவையில் இன்றைய விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சட்டப்பேரவையும் டாஸ்மாக்கும் மட்டுமே மூடப்படவில்லை. ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து 6 மாதம் விலக்கு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, வரிவிதிப்பில் விலக்குதருவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவெடுக்க வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கும்முடிவை மாநிலங்களும் பின்பற்றும் என்றார்.