சென்னை: தமிழகத்தில் கரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 7ஆக உயர்கிறது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 223 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் இதுவரை 5 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 7ஆக உயர்கிறது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளியன்று செய்தியாளர்களிம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, நெல்லை, திருவாரூர், தேனி மற்றும் சேலத்தில் கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளது.
இந்நிலையில் மேலும் 2 இடங்களில் கரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கரோனா பரவலைத்த தடுக்க விடுமுறை அறிவித்த பிறகும் வெளி இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது.
எனவே தேவையற்ற பயணத்தை மக்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.