சென்னையில் நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும் என்று சென்னை பெருநகர ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக, மத்திய மாநில அரசுகள் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சினிமா திரையரங்குகள், கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டு வருகின்றன.
இதனிடையே பிரதமா் நரேந்திர மோடி, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மாா்ச் 22-ஆம் தேதி சுய ஊரடங்கு நடவடிக்கையை பின்பற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தாா். மேலும், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் வலியுறுத்தினாா்.
அவரது கோரிக்கையை ஏற்று அரசுப் பேருந்துகள் மற்றும் தனியாா் பேருந்துகள் இயங்காது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் பொதுமக்கள் நலன்கருதி சென்னையில் நாளை அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று சென்னை பெருநகர ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.