கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துக! அன்புமணி

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துக! அன்புமணி

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கரோனா வைரஸ் கடந்த இரு நாட்களில் மட்டும் 113 பேரை புதிதாக தாக்கியிருக்கிறது. அடுத்தடுத்த நாட்களில் கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், அதன் தீவிரத்தை அரசுகள் உணர வேண்டும்.

சீனாவில் திசம்பர் மாதத் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் நோய் இந்தியாவில் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. சீனாவில் கொரோனா நோய் தோன்றிய வூகான் பல்கலைக்கழகத்தில் படித்து கேரளம் திரும்பிய மாணவி ஒருவர் தான் இந்தியாவில் முதல் கரோனா வைரஸ் நோயாளி ஆவார். அதன்பிறகும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அவ்வளவு வேகமாக பரவவில்லை. மார்ச் 3-ஆம் தேதி வரையிலான 33 நாட்களில் இந்தியாவில் மொத்தம் 9 பேர் என்ற ஒற்றை இலக்கத்தில் தான் கொரோனா பாதிப்பு இருந்தது. அதன்பின் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 171 பேரை தாக்கியுள்ளது. கடந்த 18-ஆம் தேதி 158-ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்றிரவு 271 ஆக அதிகரித்துள்ளது. 19, 20 ஆகிய இரு நாட்களில் மட்டும் 113 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதிலிருந்தே அந்த நோய் எவ்வளவு வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கேரளத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  அவர்களையும் சேர்த்து அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மராட்டியத்தில் 63 ஆக அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான், தில்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதனால் தான் வந்த பின் வருந்துவதை விட, வருமுன் காப்போம் என்ற எண்ணத்தில் இந்தியாவில் 3 வாரங்களுக்கு ஊரடங்கு கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாடு  அதன் அண்டை மாநிலங்களுடனான எல்லைகளை மூடியிருப்பதும், பிரதமர் அழைப்பு விடுத்த மக்கள் ஊரடங்கை வெற்றிகரமாக நடத்த ஏற்பாடு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கவை. இதையே அடுத்த 3  வாரங்களுக்கு நீட்டிப்பது உள்ளிட்ட கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும்; பொதுமக்களை காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com