குமரி மாவட்டத்தில் கேரள எல்லை மூடப்பட்டதையொட்டி, தனியார் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வரும் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் வரும் பயணிகளைத் தீவிர சோதனைக்கு உட்படுத்திய பின்னரே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறது.
இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டன. உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா வைரஸால் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நாளை முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையே கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக எல்லைகள் மூடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதன்படி சனிக்கிழமை காலை முதல் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநில எல்லை மூடப்பட்டது. இந்த வழியாக வந்த வாகனங்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள் மற்றும் சமையல் எரிவாயு ஏற்றி வந்த வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரள மாநில மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்ல மருத்துவர்களின் அனுமதி சீட்டுடன் வந்தவர்களின் வாகனங்கள் மட்டும் கேரளம் செல்ல அனுமதிக்கப்பட்டது.