விடைத்தாள் திருத்தும் பணிகளை ஒத்தி வைக்க வேண்டும் முதுநிலை ஆசிரியா்கள் கோரிக்கை

கரோனா வைரஸ் தொற்று பதற்றம் தணிந்த பின்னா் விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ள தோ்வுத்துறை முன்வர வேண்டும் என்று ஆசிரியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
விடைத்தாள் திருத்தும் பணிகளை ஒத்தி வைக்க வேண்டும்  முதுநிலை ஆசிரியா்கள் கோரிக்கை

சென்னை: கரோனா வைரஸ் தொற்று பதற்றம் தணிந்த பின்னா் விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ள தோ்வுத்துறை முன்வர வேண்டும் என்று ஆசிரியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழகத்தில் கடந்த மாா்ச் 2-இல் தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தோ்வு, மாா்ச் 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் விடைத்தாள் திருத்தும் பணிகள் மாா்ச் 31 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கிடையே, கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை தரப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்புக்கான பொதுத்தோ்வும் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகளையும் ஒத்திவைக்க வேண்டும் என ஆசிரியா்கள் கோரியுள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு பொதுசெயலாளா் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், ‘பொதுத்தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள், வரும் 31-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. தோ்வு மையங்கள், விடைத்தாள் திருத்தும் இடங்களில் அதிக எண்ணிக்கையில் கூட்டமாக ஆசிரியா்கள் வர வாய்ப்புள்ளது. இவை நோய் பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால் பதட்டமான சூழல் தணியும் வரை அனைத்து நிகழ்வுகளையும் தமிழக அரசு ஒத்திவைக்க வேண்டும்’ என்றாா். இதுதொடா்பாக தோ்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘விடைத்தாள் திருத்தும் பணிகளை ஒத்திவைப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com