சென்னை: ஞாயிறன்று தமிழகத்தில் பால் தடையின்றி கிடைக்கும் என்று ஆவின் நிர்வாகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 291 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மாநில அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வியாழனன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது வரும் ஞாயிறன்று இந்தியா முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும், அன்று காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மக்கள் அவசியன்றி வெளியில் வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி நாளை தமிழகத்திலும் ஒரு சில அத்தியாவசியத் சேவைகள் தவிர, பேருந்து, மெட்ரோ ரயில், ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் உள்ளிட்ட பெரும்பாலான சேவைகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிறன்று தமிழகத்தில் பால் தடையின்றி கிடைக்கும் என்று ஆவின் நிர்வாகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
பால் உள்ளிட்ட பொருட்கள் அத்தியாவசியத் தேவை பட்டியலின் கீழ் வருகின்றது என்றாலும், நாளை பால் சரியான அளவில் கிடைக்காது என்று சில முகவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியது.
இதுதொடர்பாக ஆவின் நிர்வாகத் தரப்பில் கூறுகையில், 'தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் ஆவின் நேரடி விற்பனை நிலையங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் ஆகியவை தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளனர்.