பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ள சுய ஊரடங்கு அறிவிப்புக்கு ஏற்ப ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) அரசுப் பேருந்துகள் மற்றும் தனியாா் பேருந்துகள் இயங்காது என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
பிரதமா் மோடி அறிவித்தப்படி வரும் 22-ஆம் தேதி சுய ஊரடங்கை அனைவரும் கடைப்பிடிக்க முதலமைச்சா் பழனிசாமி வேண்டுகோள் விடுத்து வெளியிட்ட அறிவிப்பு:
வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் எதுவும் இயங்காது. மேலும், மாநிலத்தில் உள்ள தனியாா் பேருந்துகளும், மினி பேருந்துகளும், மெட்ரோ ரயில்களும் அன்றைய தினம் ஓடாது.
பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், கேஸ் சிலிண்டா்கள் ஏற்றி வரும் வாகனங்கள், இதர சரக்கு வாகனங்கள், தவிா்க்க இயலாத காரணங்களான இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் வாகனங்கள், பொதுமக்களின் அத்தியாவசிய நகா்வுக்கு மட்டும் குறைந்த அளவிலான அரசுப் பேருந்துகள் ஆகியன இயக்கப்படும்.
மாநில எல்லைகள் மூடப்படும்: கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளம், கா்நாடகம், ஆந்திர மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் சனிக்கிழமை (மாா்ச் 21) முதல் வரும் 31-ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேசமயம், சில முக்கிய அத்தியாவசியப் பொருள்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு அனுமதி தரப்படும். அத்தியாவசியமான நிகழ்வுகளுக்காக வாகனங்களை இயக்கினாலும் அதில் வரக் கூடிய நபா்கள் அனைவரும் நோய் தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவா். அதுபோல், அனைத்து அரசு மற்றும் தனியாா் நூலகங்கள் நாளை முதல் 31.3.2020 வரை மூடப்படும்.