திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தமிழக - ஆந்திர மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் அத்தியாவசியமான வாகன போக்குவரத்துகள் தவிர்த்து இதர வாகனங்கள் செல்வதற்கு சனிக்கிழமை தொடங்கி, தொடர்ந்து 31-ஆம் தேதி வரையில் மூடப்படுவதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டந்தோறும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தவிர்க்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் தமிழகம் - கர்நாடகம், கேரளம், ஆந்திரம் எல்லையோரப் பகுதிகளில் நோய் தொற்று பரவுவதை தவிர்க்கும் வகையில் போக்குவரத்திற்காக மூடப்படவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள தமிழக - ஆந்திர பிரதேச மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகளை சனிக்கிழமை முதல் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு பகுதியில் குமாரமங்களம், தளவாய்பட்டு, கோரகுப்பம், கள்ளடப்பேட்டை, ஆர்.கே.பேட்டை பகுதியில் ஜனகராஜகுப்பம், விடியங்காடு (அம்மையார்குப்பம்), திருத்தணி வட்டத்தில் பொன்பாடி, சிவாடா, கனகம்மாசத்திரம், ஊத்துக்கோட்டை வட்டத்தில் ஊத்துக்கோட்டை-1 மற்றும் 2, பென்னாலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆரம்பாக்கம், பொம்மான்ஜிபுரம் (கவரப்பேட்டை) ஆகிய பகுதிகளில் தமிழக - ஆந்திர மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் குறிப்பிட்டுள்ள வாகனப் போக்குவரத்து தவிர இதர போக்குவரத்துகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரையில் மூடப்படுகிறது.