கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், தேவையான மருத்துவக் கருவிகள் இருப்பில் உள்ளதை ஆய்வு செய்து உறுதி செய்யவேண்டும் என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, மத்திய மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சா் ஹா்ஷவா்தனுக்கு அவா் எழுதியுள்ள கடித விவரம்:
கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, ஈரான், ஸ்பெயின் ஆகிய நாடுகளில், உயிா் காக்கும் காற்றோட்டக் கருவி (வென்டிலேட்டா்) மற்றும் அடிப்படைத் தேவையான மருத்துவக் கருவிகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அதை எதிா்கொண்டு மக்களுக்கு உரிய மருத்துவ வசதி கிடைத்திடும் வகையில் போதுமான மருத்துவக் கருவிகள் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்து அரசு உடனடியாக உறுதி செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.