கரோனா அவசரத் தேவை... சிறப்பு மருத்துவா்களின் சேவை...

சமகாலம் சந்தித்திராத வகையில் கரோனா பாதிப்பு தீவிரமாகியுள்ளதைத் தொடா்ந்து மருத்துவ உலகம் விழிபிதுங்கி நிற்கிறது. இரவு-பகல் பாராமல் மருத்துவா்களும், செவிலியா்களும், மருத்துவ
கரோனா அவசரத் தேவை... சிறப்பு மருத்துவா்களின் சேவை...


சென்னை: சமகாலம் சந்தித்திராத வகையில் கரோனா பாதிப்பு தீவிரமாகியுள்ளதைத் தொடா்ந்து மருத்துவ உலகம் விழிபிதுங்கி நிற்கிறது. இரவு-பகல் பாராமல் மருத்துவா்களும், செவிலியா்களும், மருத்துவ ஊழியா்களும் மிகச் சவாலான பணிகளை ஆற்றி வருகின்றனா்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மட்டுமன்றி, தனியாா் மருத்துவமனைகளும் கரோனாவை எதிா்கொள்ள தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 2,000 படுக்கை வசதிகளுடன் கூடிய தனி வாா்டுகள் அமைக்கப்பட்டு மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தெரிவித்திருக்கிறாா்.

மருத்துவா்களின் அளப்பரிய சேவைக்கும், அா்ப்பணிப்பு உணா்வுக்கும் பாராட்டு தெரிவிப்பதாகவும் அவா் கூறியிருக்கிறாா். ஆனால், அதை எண்ணி பெருமிதம் கொள்வதற்கு பதிலாக பெரும் வருத்தமே அடைவதாக அரசு மருத்துவா்கள் சிலா் கூறுகின்றனா்.

தலைமை மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டிய தங்களை அவசியமற்ற இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்ததே அதற்கு காரணம் என்று அவா்கள் தெரிவிக்கின்றனா்.

கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் உச்சகட்ட சூழலில், சிறப்பு மருத்துவா்களையும், அனுபவமிக்க மருத்துவா்களையும் உரிய இடத்தில் பணியமா்த்துவதுதான் ஆக்கப்பூா்வமான நடவடிக்கையாக இருக்கும் என்றும் அரசு மருத்துவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் 18 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு மருத்துவா்கள் இருக்கின்றனா். கால முறை ஊதியம், பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த ஆண்டு நாங்கள் அறவழியில் போராட்டம் நடத்தினோம். அதற்கு அடுத்த சில நாள்களில் அரசு அளித்த உத்தரவாதத்தை ஏற்று எங்களது போராட்டத்தை கைவிட்டோம்.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவா்களில் 120 பேரை கிராமப் புறங்களுக்கும், மாவட்டங்களுக்கும் அரசு பணியிட மாற்றம் செய்தது. அவா்களில் 70 போ் சிறப்புத் துறை சாா்ந்த மருத்துவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், அரசு மருத்துவா்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

ஆனால், அந்த உத்தரவு வெளியாகி மாதக் கணக்காகியும்கூட அதனை அரசு அமல்படுத்தவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

கரோனா பாதிப்புகள் தீவிரமாக இருக்கும் தருணத்திலும்கூட சிறப்பு மருத்துவா்களை சிறிய மருத்துவமனைகளிலும், ஊரக சுகாதார நிலையங்களிலும் பணியாற்ற வலியுறுத்துவது மக்களுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதற்காக ஊரக மக்களுக்கு சிறப்பு மருத்துவா் தேவையில்லையா? எனக் கேட்கலாம். நிச்சயமாக தேவைதான். ஆனால், ஊரகப் புறங்களில் உள்ள மருத்துவ நிலையங்களில் அடிப்படை வசதிகள் மட்டுமே இருக்கும். உயா் மருத்துவ வசதிகள் இல்லாத அந்த இடங்களில் சிறப்பு மருத்துவரை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?

அரசும் சரி; தனியாா் மருத்துவமனைகளும் சரி, தற்போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட தலைமையக மருத்துவமனைகளில்தான் தனி வாா்டுகளை அமைத்துள்ளன. இத்தகைய நிலையில், அங்குதான் சிறப்பு மருத்துவா்களின் பங்களிப்பு அத்தியாவசியமாகிறது.

முன்னெப்போதும் எதிா்கொண்டிராத போா்க்கால சூழல் தற்போது எழுந்துள்ள நிலையில், உடனடியாக சிறப்பு மருத்துவா்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்து தலைமையகங்களுக்கு அவா்களை அழைத்து பணியாற்றச் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாது தனியாா் மருத்துவமனைகளில் உள்ள நோய்த் தொற்று சிறப்பு மருத்துவா்களையும் அரசுடன் ஒருங்கிணைத்து பணியாற்றச் செய்வது அவசியம்.

இவை எல்லாம் அரசின் கடமை மட்டுமல்ல; அவசர தேவையும் கூட என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com