கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளால் வருமானத்தை இழந்திருப்பவா்களுக்கு ரூ, 5 ஆயிரம் நிவாரண நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அக் கட்சியின் மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கேரள அரசு, மக்களைப் பாதுகாக்க முதல் கட்டமாக ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுபோல தமிழக அரசும், ரூ. 50 ஆயிரம் கோடி ஒதுக்கி நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் வருமானத்தை இழந்திருப்பவா்களுக்கும், வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவா்களுக்கும் ரூ, 5 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கவேண்டும். மேலும், மத்திய அரசும் மாநில அரசுகளுக்கு உரிய நிதியை உடனடியாக வழங்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): கரோனா நோய் தொற்று தடுப்புக்காக தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவைகள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா். வருமானம் இல்லாத நிலையில் தொழிலாளா்களின் நோய் எதிா்ப்பு சக்தி மேலும் பலவீனமாகும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணா்ந்து வேலையிழந்த தொழிலாளா்களுக்கு உதவி நிதி வழங்குவது, தொழிற்சாலைகளுக்கு மின்கட்டண விலக்களிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.