பனியன் தொழில் நகரான திருப்பூரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கிறார்கள். பல லட்சம் தொழிலாளர்களும் தினசரி வந்து செல்லும் இடமாக உள்ளது. கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை காரணமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள மக்கள் ஊரடங்கு அறிவிப்பை ஒட்டி திருப்பூர் மக்கள் இன்று முழுமையாக முடங்கி உள்ளனர்.
இதனால் திருப்பூரில் உள்ள முக்கிய சாலைகளான அவிநாசி சாலை, பல்லடம் சாலை, காங்கேயம் சாலை, தாராபுரம் சாலை, மங்கலம் சாலை, பெருமாநல்லூர் சாலை, திருப்பூர் பழைய பஸ் நிலையம் பகுதி, திருப்பூர் புதிய பஸ் நிலையம், ரயில் நிலையம் என அனைத்து இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. திருப்பூரில் உள்ள கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடங்கி னார்கள்.
இதனால் அதிகாலை நேரத்தில் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு செல்லும் கூட்டம் மட்டும் காணப்பட்டது. ஓரிரு இறைச்சிக் கடைகள் மட்டும் திறந்து இருந்தன மற்றபடி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் திருப்பூர் மாநகரம் முழுமையாக வெறிச்சோடியது. நோய்த்தடுப்பு நடவடிக்கைக்காக திருப்பூர் மாநகரம் முழுமையாக முடக்கம் கண்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.