ஊரடங்கு நிலவரத்தை கண்காணிக்க 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் ஊரடங்கு நிலவரத்தைக் கண்காணிப்பதற்கு 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 'சென்னையில் ஊரடங்கை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மாநகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் இடம் பெற்றிருப்பார்கள். மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வராதவாறு கண்காணிக்கவும், வீட்டில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தவும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன' என்று கூறினார்.