கரோனா சிகிச்சைக்கு 363 படுக்கைகள் தயார்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஈரோடு: கரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 363 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என பளளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 
அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: கரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 363 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என பளளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம்  இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர். 

கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்யைன் பேசியதாவது: தாய்லாந்து நாட்டில் இருந்து 7 பேர் மதபிரசாரத்திற்காக கடந்த 11ஆம் தேதி ஈரோடு வந்து, சுல்தான்பேட்டை, கொல்லம்பாளையம் மசூதிகளில் தங்கி இருந்தனர். இதில் 2 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருவரின் உடல்நிலையும் தற்போது முன்னேற்றம் அடைந்து வருகிறது. தாய்லாந்து நாட்டினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 11 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். ஈரோடு சுல்தான்பேட்டை மற்றும் கொல்லம்பாளையத்தில் 295 குடும்பங்களை சேர்ந்த 1,118 நபர்கள் வீடுகளில் 28 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது தற்காலிகமாக கரோனா சிகிச்சை மட்டுமே அளிக்கும் வகையில் 300 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர ஈரோடு அரசு மருத்துவமனையில் 8, பவானி 10, அந்தியூர் 6, சத்தி 4, கோபி 4, ஈரோடு கேஎம்சிஎச் மருத்துவமனை 5, லோட்டஸ் மருத்துவமனை 5, ஈரோடு ஆஸ்ரம் பள்ளி வளாகத்தில் 17 படுக்கைகள் என மொத்தம் 363 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

மேலும் 75 படுக்கைள் முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொருத்த வரை மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் எம்எல்ஏக்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, ராஜா, ஈஸ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com